You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
Title: Jambarum Veshtiyum
Author: N. Pichamurthy
வழக்கமான கோடைக்காலத்து நாட்களைப் போன்றதொரு நாள்தான் அன்றும். வேறு புதுமை ஒன்றும் இல்லை.
குமரன் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். அறை நடுவில், ஒரு கையில்லா நாற்காலியின் மீது முக்கால் நிர்வாணமாய், தலைமயிர் இடுப்பு வரையில் மயில் தோகையைப் போல் புரள ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். விரிந்த வாதாங்கொட்டை போன்ற கண்கள்; மதுரையான் கோவில் அரிவாள் போன்ற புருவங்கள்; கிளிபோன்ற அழகு; ராணிபோன்ற கம்பீரம்; அபினிப்பூவைப்போன்ற லாகிரி உண்டாக்கும் தோற்றம்; வாழை போன்ற உடல் மினுக்கும் உருவம்- இவைதான் - சுசீலா, குமரன் மனைவி.
முக்கால் நிர்வாணம் என்றால் நம்பத்தகாததா யிருக்கலாம்; ஆனால் அது முற்றிலும் உண்மை. அவளை அவன் மணந்ததே நம்பத்தகாதது.
தான் மணமான பிறகு கூட அவளுடைய பெற்றோர்களே நம்பாமல் பிரமையடைந்தார்கள் என்றால் சொல்வானேன்! மல்லிகை மொட்டில் சிறைபட்டுக் கிடக்கும் மணத்தை சூரிய கிரணமும் சந்திரனின் தீண்டலும் வலுவில் வந்து விடுவிப்பது போல குமரன் அவளை மணக்க ஏன் முன் வந்தான்? அவள் அழகா அழைத்தது, ஒரு ஊர்த் தேனீயை மற்றொரு ஊர் புஷ்பக்கடை வரையில் இழுத்துச் செல்லும் ரோஜாவின் மணம் போல்? அதுவாக இருக்க முடியாது.
அவளைப் பொறுக்கி எடுக்க வந்தவன் அவளுடைய நிறைந்த அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால், குறையைப் பற்றி அறியாமலா இருப்பான்?
இவ்விடுகதைக்கு விடையை பெற்றோர்கள் கூட காணக் கூடவில்லை. சுசீலாவின் தகப்பனார் ஒரு சித்த வைத்தியர். பாம்புப் பிடாரன் விஷத்துடன் விளையாடுவது போல, லிங்கம், பூரம், பாஷாணம் இவைகளுடனேயே தன் காலத்தைக் கழித்து வந்தவர். சித்த வைத்தியத்தின் படிக்கட்டுகள் ஏறி பொன் மாடியில் நுழைய முயன்றவர்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ஜம்பரும் வேஷ்டியும்.