Description
எண்ண உதிரல்களை வீணாக விரயமாக்க விரும்பாமல், அதனை எழுத்துகளாய் மாற்றி முக்கியத்துவம் கொடுக்க நினைத்தேன். அப்படி வந்த கவிதைகளின் ஒரு பகுதியாய், "ஒரே அடியில முடிச்சிட்டேன்" என்ற இந்த கவிதை தொகுப்பை வெளியிடுகிறேன். இது ஒரு வரியில் உள்ளது 'ஆதலால் தலைப்பு வேண்டாமே' என்று முடிவு எடுத்தேன்.
பக்கம் பக்கமாய் விளக்கம் கொடுப்பதற்கு பதிலாக, ஒரே வரியில் மிகச் சுருக்கமாக எப்படி ஒருவருக்கு புரியும்படி, புருவம் உயரும்படி எழுவது என்று எனது எண்ணத்தில் வெளிப்பாடு இந்த கவிதை தொகுப்பு.
எழுதப்பட்டுள்ள துளிப்பாக்கள் ஐம்பதின் பொருளும் உங்களது கற்பனைக்கே.
மகிழ்ச்சி!
வணக்கம், நான் பிரசாந்த் G.
எனக்குள்ளும் கவிதை எழுத வரும் என்ற அந்த மெல்லிய உணர்வு, கல்லூரி இரண்டாம் ஆண்டின் போதுதான் முதன்முதலாகத் தட்டியது. பள்ளி வரை தமிழ் வழியில் பயின்று, கல்லூரியில் ஆங்கிலச் சூழலுக்கு மாறியபோதும், எனக்குள் இருந்த தமிழ் ஆர்வம் குறையவில்லை.
ஒரு செயலை என்னால் செய்ய முடியும் என்று தோன்றிவிட்டால், அதில் அலட்சியம் காட்டாமல் முழு ஈடுபாட்டுடன் இறங்குவது எனது இயல்பு. அந்த ஈடுபாட்டின் பரிமாணமே இந்த கவிதைத் தொகுப்பு. கவிதைகளை என்னென்ன வடிவங்களில் எல்லாம் சொல்ல முடியும் என்று பலவாறு முயன்று பார்த்திருக்கிறேன். உண்மையைச் சொன்னால், நான் எழுதியவை எந்த வகைப்பாட்டில் வரும் என்பது இன்றுவரை தெரியாது; ஆனால் அவை என் மனதின் எதிரொலிகள். ஆதலால், அந்த எண்ணங்களை வீணாக விரயமாக்க எனக்கு விருப்பமில்லை.
புனைப்பெயரோடு கவிதைகளை எழுதலாம் என்று தோன்றியபோது, கவிதையிலிருந்து 'கவி' என்பதையும், எனது தாயின் பெயரான மணிமேகலை என்பதில் இருந்து 'மணிமேகலை' என்பதையும் இணைத்து, "கவிமணிமேகலை" என்ற புனைபெயருடன் இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
எழுதிய அனைத்தும் 'ஆஹா! ஓஹோ!' என்று பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு வரி உங்கள் மனதைத் தொடும்; உங்கள் வாழ்வின் ஒரு கணத்தைப் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கையில் இதனை உங்கள் வாசிப்பிற்கு விருந்தாக்குகிறேன்.
எப்போதுமே சொற்களை விட மௌனமே சிறந்தது என்று நினைப்பவன் நான். ஆனால், அந்த மௌனத்தின் போதுதான் எண்ணங்களில் ஏதேதோ சிந்தனைகள் உருவெடுத்து இப்படிக் கவிதைகளாய் ஊற்றெடுக்கின்றன. அப்படி ஊற்றெடுத்த கவிதைகளின் வாயிலாக, மௌனம் மட்டுமல்ல சொற்களும் சிறந்தவைதான் என்று இப்போது உணர்கிறேன்.
அந்த வகையில் உதிரும் ஒவ்வொரு சொல்லும் யாரையும் கொல்லாமல், சுடாமல், பிறர் மனதின் காயங்களுக்கு மருந்திட்டு மாயம் செய்வதாக இருக்க வேண்டும்.
இந்த கவிதைத் தொகுப்பு உங்களுக்கு மருந்தாகுமா அல்லது மாயம் செய்யுமா என்று தெரியாது; ஆனால், நீங்கள் செலுத்தும் பணத்திற்கு நிச்சயம் நியாயம் செய்யும்.
மகிழ்ச்சி!